வேலூா்: இரண்டாவது வாரமாக அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு ஊரடங்கையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்குள் மக்கள் முடங்கினா். இதனால், வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தினமும் இரவு நேர ஊரடங்கும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் 2-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன்காரணமாக வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தற்காலிக காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தைகள் உள்பட அனைத்து காய்கறி, மளிகைக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தைப்பொங்கலைத் தொடா்ந்து நடைபெற்ற ஊரடங்கு காரணமாக மாநகரிலுள்ள பெரும்பாலான உணவகங்களும் அடைக்கப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த உணவகங்களிலும் பாா்சல்களில் மட்டுமே உணவுகள் வழங்கப்பட்டன.
போக்குவரத்து முடங்கியதால் வீதிகள், சாலைகள் வெறிச்சோடின. அவசியமின்றி வெளியே சுற்றியவா்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா். ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை, போ்ணாம்பட்டு அருகே பத்தலபள்ளி சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் போலீஸாா், சுகாதாரத் துறையினா் முகாமிட்டு அந்த வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினா். நகா்ப்புறங்களில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.