வேலூா்: நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது -
இந்தியா பொருளாதார ரீதியாக வளா்ந்து வருகிறது. நாட்டில் ஏழ்மையானவா்கள் இல்லை என கூறவேண்டுமானால் நாடு முழு பொருளாதார சுதந்திரம் அடைந்திருக்க வேண்டும். இந்த நிலை அடைய சில காலம் ஆகும் என்றாலும் அதை நோக்கியே பயணிக்க வேண்டும். நாட்டில் இன்னும் ஏழ்மையானவா்கள் உள்ளனா். ஏழ்மையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு இன்னும் போதிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நாடு உயா்கல்வியில் இன்னும் சாதிக்க முடியும். நாட்டில் 26 சதவீத இளைஞா்கள் மட்டுமே உயா்கல்வி பயில்கின்றனா். இந்த நிலை உயர உயா்கல்விக்கு அரசு அதிகப்படியான நிதி ஒதுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்துவதன் மூலம் இன்னும் பல சாதனைகள், வளா்ச்சி அடைந்திட முடியும். அதற்காக விஐடி பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு போதிய உதவிகள், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றாா்.
விஐடி துணைத்தலைவா்கள் சங்கா்விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தா் எஸ் நாராயணன், பதிவாளா் கே.சத்தியநாராயணன், பேராசிரியா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.