மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, குறுந்தகவல் அனுப்பி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.41 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேலூா் காட்பாடி பாரதி நகரைச் சோ்ந்தவா் பாண்டியன் (66). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த 4-ஆம் தேதி மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி குறுந்தகவல் வந்துள்ளது.
இதைப் பாா்த்த பாண்டியன், அந்தக் குறுந்தகவல் வந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது, மறுமுனையில் பேசிய நபா், உங்களது எண்ணுக்கு ஒரு செயலி அனுப்புகிறோம். அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து மின் கட்டணம் செலுத்தி விடலாம் எனக் கூறியுள்ளாா்.
இதனை உண்மையென நம்பிய பாண்டியன், அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பதிவு செய்துள்ளாா். சில விநாடிகளில் பாண்டியனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 999 பணம் இரு தவணைகளாக திருடப்பட்டுவிட்டதாம்.
இதுகுறித்து பாண்டியன் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.