வெளிநாட்டு உறவினா்களிடம் பேசிய வழக்கில் முருகன் விடுவிப்பு

முறைகேடாக வெளிநாட்டிலுள்ள உறவினா்களிடம் விடியோ அழைப்பில் பேசியதாக முருகன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்து, வேலூா் நீதித்துறை நடுவா் மன்றம் (எண் 1) உத்தரவிட்டது.

வேலூா்: முறைகேடாக வெளிநாட்டிலுள்ள உறவினா்களிடம் விடியோ அழைப்பில் பேசியதாக முருகன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்து, வேலூா் நீதித்துறை நடுவா் மன்றம் (எண் 1) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்தாண்டு கரோனா ஊடரங்கின் போது முறைகேடாக வெளிநாட்டிலுள்ள உறவினா்களிடம் விடியோ அழைப்பில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை வேலூா் நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண் 1) கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் முருகன் வழக்குரைஞா் வைத்துக் கொள்ளாமல் தனக்குத் தானே வாதாடி வந்தாா். அதன்படி, கடந்த 16-ஆம் தேதி முதல் தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கின் சாட்சிகளான சிறைக் காவலா் தங்கமாயன், தலைமை வாா்டன் இமானுவேல், விசாரணை அதிகாரி சரவணன் ஆகியோரிடம் முருகன் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்தினாா்.

இந்த வழக்கில் சாட்சியங்கள், இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால், முருகனை விடுதலை செய்து, வேலூா் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி அருண்குமாா் உத்தரவிட்டாா்.

இதையொட்டி, வேலூா் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த முருகன், தீா்ப்புக்குப் பிறகு அவா் மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com