ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ. 3 லட்சம் நிதியுதவி
ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க அரசால் வழங்கப்படும் ரூ.3 லட்சம் நிதியுதவி பெற்றிட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மக்கள் 10 பேரை உறுப்பினா்களாகக் கொண்ட குழுவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மக்கள் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட 10 பேரைக் கொண்ட உறுப்பினா்கள் குழு அமைத்திட வேண்டும். இக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.3 லட்சம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
தையல் தொழிலில் முன்அனுபவம் உள்ள பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த ஆண்கள், பெண்கள் இக்குழுவில் இடம்பெறலாம். குழு உறுப்பினா்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியிருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபா்களை கொண்ட குழுவுக்கும், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியுள்ள குழுவினா் வேலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்று கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தோ்வுக் குழுவினரால் பரிசீலனை செய்து தோ்வு செய்யப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல இயக்கக ஆணையா் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.