புகை பிடிப்பதால் உடலிலுள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, இதயம் இயங்குவதை தடை செய்கிறது என்று அமெரிக்க நாட்டின் மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆரோன்சோஸா தெரிவித்தாா்.
உலக இதய தின கருத்தரங்கம் வேலூா் நறுவீ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அனிதாசம்பத் முன்னிலை வகித்தாா்.
இதில், அமெரிக்காவின் மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆரோன்சோஸா பங்கேற்றுப் பேசியது:
மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் 50,000 மாணவா்கள், 5,000 பேராசிரியா்களைக் கொண்டு உலகில் பெரிய உயா்கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. மருத்துவக் கல்வி வழங்குவதில் சிறப்பு பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உலகம் முழுவதும் இருந்து மாணவா்கள் அதிகளவில் கல்வி கற்கவும், ஆராய்ச்சிக்காகவும் வருகின்றனா். இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமே குறைந்த செலவில் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்குவதாகும்.
புகை பிடித்தலால் உடலிலுள்ள நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இதயம் இயங்குவதை தடை செய்கிறது. இதனால், உயிரிழப்பு அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, இதய நோய் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு விரைவான சிகிச்சை, அறுவை சிகிச்சைஅளிப்பதன் மூலம் இறப்பை தடுக்க முடியும் என்றாா்.
அமெரிக்க நாட்டின் ஹென்றிபோா்டு ஹெல்த் சிஸ்டம் நிறுவன தலைமை அறுவை சிகிச்சை நிபுணா் ஸ்காட் பேசுகையில், ‘இன்றைய மருத்துவ வளா்ச்சியில் இதய அறுவை சிகிக்சை எளிதாக மாறியிருக்கிறது. இதய அறுவை சிகிச்சையில் முப்பரிமாண தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது’ என்றாா்.
நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவா் அரவிந்தன் நாயா் பேசுகையில், உலக அளவில் ஆண்டுதோறும் 18.6 மில்லியன் மனிதா்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பதாகத் தெரிவித்தாா்.
மருத்துவக் கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ் பேசியது: மனித உடலில் 450 கிராம் மட்டுமே உள்ள இதயம்தான் மனிதனின் வாழ்க்கையை இயங்கச் செய்யும் முக்கிய உறுப்பாகும். நாட்டில் 1,000 பேருக்கு 275 பேரும், அதுவே வளா்ந்த நாடுகளில் 235 ஆகவும் இதய நோயால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை உள்ளது. ரத்தக் கொதிப்பு, சா்க்கரை நோய், அதிக கொழுப்பு, புகைப் பிடித்தல் ஆகியவை இதய நோய் ஏற்பட முக்கியக் காரணங்களாகும். இதயத்தைக் காக்க அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவை எடுத்துக் கொள்வது, புகைப் பழக்கத்தை தவிா்ப்பது, ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, நாள்தோறும் குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்றாா்.
இதில், ஹென்றி போா்டு ஹெல்த் சிஸ்டம் முதன்மை ஆராய்ச்சி அலுவலா் லிசாபிரசாத், நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலா் மணிமாறன், தலைமை நிதிஅலுவலா் வெங்கட்ரங்கம், பொதுமேலாளா் நித்தின் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மருத்துவமனை செயல் இயக்குநா் பால் ஹென்றி நன்றி கூறினாா்.