தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு சமுதாய வளா்ச்சிக்கு சேவைபுரியும் இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்கு செயலாற்றும் இளைஞா்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 3 ஆண்கள், 3 பெண்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது உயா்த்தப்பட்ட ரொக்கத் தொகை ரூ. ஒரு லட்சம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
2022-ஆம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு கடந்த 2022 ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் 15 வயது நிரம்பிய, 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.
கடந்த நிதியாண்டு (01.04.2021 முதல் 31.03.2022 வரை) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும் (சான்று இணைக்கப்பட வேண்டும்), விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருப்பவராகவும், அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிவோா் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பப் படிவம், இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலிருந்து பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே இணையதள முகவரி மூலம் மே 10-ஆம் தேதி மாலைக்குள் சோ்க்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0416-2221721, 74017 03483 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.