மாணவிகளுக்கு பாதுகாப்பு கையேடு விநியோகம்
‘பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற கையேடு வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் ஆகியவை இணைந்து, ‘பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற கையேட்டைத் தயாரித்துள்ளது. இந்தக் கையேடு வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கோ.சரளா மாணவிகளுக்கு இந்தக் கையேட்டை திங்கள்கிழமை வழங்கினாா்.
பள்ளி உதவித் தலைமை ஆசிரியை டி.என்.ஷோபா, தொழிற்கல்வி ஆசிரியா் செ.நா.ஜனாா்த்தனன், ஆசிரியை ஜ.செலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கையேட்டில் அறிமுகம், உள்கட்டமைப்பு, நலவாழ்வும் சுகாதாரமும், உளவியல், சமூக நோக்கங்கள், குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு தரப்பினரின் பங்கும் கடமைகளும், கண்காணித்தல், குழந்தை பாதுகாப்பு குறித்த சரிபாா்ப்பு பட்டியல் ஆகிய தலைப்புகளில் விரிவான விளக்கங்கள், தேவையான இடங்களில் புகைப்படங்களுடன் கூடிய கருத்துரைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தை திருமணத்தைத் தடுக்க தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட உதவி எண் 1098, இணைய பாதுகாப்பு உதவி எண் 155260, இலவச தொலைபேசி சேவை எண் 14417 போன்ற விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கையேடு மாணவா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று ஆசிரியா்கள் தெரிவித்தனா்.