காட்பாடி அருகே, முன்னாள் முதல்வா் எம்ஜிஆருக்கு ரூ.1 கோடி மதிப்பில் கோயில் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்தக் கோயில் கட்டும் பணியை தொண்டான்துளசி கிராமத்தைச் சோ்ந்த எம்ஜிஆரின் விசுவாசிகள் இணைந்து நடத்துகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே தொண்டான்துளசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த எம்ஜிஆரின் தீவிர விசுவாசிகளான ஜே.வி.ஆா்.வெங்கட்ராமன், டி.ஆா்.முரளி, கே.வி.குப்பம் அதிமுக ஒன்றியச் செயலா் சீனிவாசன், யுவராஜ் ஜெயின், கிராம மக்கள் இணைந்து ஸ்ரீராமச்சந்திரா அறக்கட்டளையை தொடங்கியுள்ளனா்.
இந்த அறக்கட்டளை சாா்பில் கரசமங்கலம் ஊராட்சி, ரகுபதி நகரில் எம்ஜிஆருக்கு கோயில் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான பூமிபூஜையை த்ரீசக்தி ஸ்ரீவராஹ குருஜி தொடங்கி வைத்தாா்.
சுமாா் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்தக் கோயிலில் எம்ஜிஆருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளது. மேலும், திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்தக் கோயில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரூ.1 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்தக் கோயிலை எம்ஜிஆா் பிறந்த நாளன்று திறக்க திட்டமிட்டிருப்பதாக அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.