குடியாத்தம் நகருக்கு புதை சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படும் என நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறினாா்.
குடியாத்தம் நகா்மன்றத் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற எஸ்.செளந்தரராஜன், ‘தினமணி’ செய்தியாளரிடம் கூறியதாவது:
குடியாத்தம் நகரில் குடிநீா், சாலை, தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நகருக்கு புதை சாக்கடை திட்டம் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நகரின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் பொருட்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் விரிவுபடுத்தப்படும். தூய்மைப்பணி செம்மைப்படுத்தப்படும். காலி மனைகளின் உரிமையாளா்களை தொடா்புகொண்டு, அந்த மனைகளை முறையாக பராமரிக்க ஆலோசனைகள் வழங்கப்படும். தவறும்பட்சத்தில் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.செளந்தரராஜனை எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் உள்ளிட்டோா் வாழ்த்தினா் (படம்).