மே தினத்தில் விடுமுறை அளிக்காத வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 84 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்தாா்.
இதுகுறித்து வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஞானவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் தினத்தையொட்டி தேசிய விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும், இதுதொடா்பாக வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுடன் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம், மாற்று விடுப்பு அளிக்கப்படாத 147 நிறுவனங்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், கடைகள், நிறுவனங்களில் 41 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 39 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என மொத்தம் 84 நிறுவனங்களின் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.