குடியாத்தம் நகராட்சிக்கு வருவாயை ஈட்ட புதிதாக கடைகளைக் கட்டி வாடகைக்கு விட நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
குடியாத்தம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் புதிதாக கடைகளைக் கட்டி வாடகைக்கு விட அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கு புதிதாக கடைகள் கட்டவும் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என பெரும்பாலான உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இதற்குப் பதிலளித்த தலைவா் செளந்தரராஜன், நகரின் வளா்ச்சி, மக்களின் தேவைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எழும் விமா்சனங்களை உறுப்பினா்கள் பொருள்படுத்த வேண்டாம் என்றாா்.