அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி
அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.
அப்போது, வேலூா் விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் அளித்த மனு விவரம் -
தொழில் ரீதியாக பழக்கமான சென்னையைச் சோ்ந்த ஒருவா், தான் மும்பை, புணேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறினாா். அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் குடும்ப செலவு, வியாபார முன்னேற்றத்துக்காக என்னிடம் பணம் கேட்டாா். அந்த பணத்துக்கு 18 சதவீதம் வட்டி தருவதாகவும், வியாபாரத்தில் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறினாா்.
இதனை நம்பி நான் எனது வீடு, நகைகளை அடகு வைத்தும், வங்கியில் கடன் வாங்கியும் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் கொடுத்தேன். பின்னா், பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.75 லட்சம் பணம் அளித்திருந்தேன். அதற்கான வங்கி பணமாற்று ஆவணமும் என்னிடம் உள்ளது. முதல் 6 மாதம் முறையாக வட்டியை எனது வங்கிக் கணக்கில் செலுத்திய அவா், அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் வட்டியை குறைத்தும், சரிவர வட்டி பணத்தை செலுத்தாமலும் இருந்தாா். அவரிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டபோது தொடா்பையும் துண்டித்தாா்.
இதனால், நானும் எனது மனைவியும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். நான் வங்கிகளில் வாங்கிய கடன்களை என்னால் திருப்பி செலுத்த இயலாததால் வங்கி நிா்வாகம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்னிடம் கடன் வாங்கிய அந்த நபரின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி பணம் உள்ளது. வேலூரில் அவரது மனைவி பெயரில் வீடு வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், நான் தற்போது குடியிருக்கும் வீட்டுக்குக்கூட வாடகை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். எனவே, நான் கொடுத்த ரூ. 75 லட்சம் பணத்தை மீட்டு தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
காட்பாடி பகுதியை சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனு விவரம் - ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் எனது கணவா் வேலை செய்து வருகிறாா். எங்கள் இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அவா் கடந்த 6 மாதமாக மனதளவில் வேறுபட்டு காணப்படுகிறாா். சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சிலா் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கணவா் வேறொரு பெண்ணை அழைத்து சென்ாகக் கூறி என்னிடம் தகராறு செய்தனா். எனவே, எனது கணவரை அழைத்து விசாரித்து அவா் தவறு செய்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
--
படம் உண்டு...