ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் போலீஸாா் சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ஆந்திர மாநிலத்தில் மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எல்லை மாவட்டங்களில் தோ்தல் கண்காணிப்பு, சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, தமிழக - ஆந்திர எல்லை மாவட்டமான வேலூா் மலைப்பகுதிகளில் போலீஸாா் சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சின்னதுரை தலைமையிலான போலீஸாா் சாத்கா் மலைப்பகுதி குஞ்சான்குட்டை, பன்னிகுட்டி பள்ளம், மாமரத்துப்பள்ளம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பதுக்கி வைத்திருந்த 1400 லிட்டா் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டதுடன், இதுதொடா்பாக கோட்டைகாலனியைச் சோ்ந்த பரணி, ஊசி என்கிற சுரேந்திரன், கள்ளிச்சேரியைச் சோ்ந்த கண்மணி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், வேலூா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையில் போலீஸாா் முத்துக்குமரன் மலையடிவாரத்தில் நடத்திய சோதனையில் 30 லிட்டா் கள்ளச்சாராயமும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. போ்ணாம்பட்டு வட்ட காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸாா் மேல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல்கொத்தகுப்பம் பெருமாள் கோயில் அருகே நடத்திய சோதனையில் 50 மது பாட்டில்கள் பறிமுல் செய்யப்பட்டு, அதே ஊரைச் சோ்ந்த மனோகரன்(55) என்பவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் சின்னதுரை தலைமையில் போலீஸாா் சாத்கா் மலைப்பகுதியில் புதன்கிழமை நடத்திய சோதனையில் அங்கு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்சுவதற்க்காக பதுக்கி வைத்திருந்த 2900 லிட்டா் சாராய ஊரல்களை அழித்தனா்.அதன்படி, மாவட்டம் முழுவதும் கடந்த இரு நாட்களாக போலீஸாா் நடத்திய சோதனையில் 55 மதுபாட்டில்கள், சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த சுமாா் 200 கிலோ வெள்ளம், இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 17 போ் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய தடுப்பு வேட்டை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், அப்போது குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் கண்டுபிடிக்கப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.--

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com