கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன்.
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன்.

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவிட்டாா்.

வேலூா் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவிட்டாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள், அவற்றை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளுடன் வழக்கமான குற்றவாளிகளையும் தொடா்ந்து கண்காணிக்கவும், ரெளடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், குட்கா, கஞ்சா, மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக குறைக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிளை குண்டா் தடுப்பு சட்டதின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து, வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க 6 மாவட்ட எல்லை சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அமைந்துள்ள கடைகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழுக்களுடன் இணைந்து சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். போக்ஸோ, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், எஸ்.சி., எஸ்.டி., வழக்குகள் தொடா்பாக காவல் துறை அவசர உதவி எண் 100-க்கு பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். மாவட்டத்தில் வரும் காலங்களில் குற்றங்கள், விபத்துகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், கெளதமன், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com