ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில், அண்ணா நகர் அருகில் உள்ள 2 அரசு டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒசூர் வட்டாட்சியர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அந்த வழியாக பெண்கள், மாணவ, மாணவியர் நடந்து செல்ல முடிவதில்லை. மேலும், அந்தப் பகுதியில் மது அருந்திவிட்டு வரும் நபர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுக்கடைகள் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநிலச் செயலர் பத்மாவதி தலைமை தாங்கினார். ஒசூர் ஒன்றியச் செயலர் நாராயணசாமி, ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமய்யா கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் சுந்தரவள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.