ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிதாக கட்டப்பட்ட ஆங்கில மொழி கணினி ஆய்வகம் தொடக்க விழா, பேரவை தொடக்க விழா, புதிய முதல்வர் பதவியேற்கும் விழா முப்பெரும் விழாவாக நடைபெற்றது. விழாவை, முன்னாள் எம்எல்ஏ, ஐஎன்டியூசி மூத்த துணைத் தலைவர் கே.ஏ.மனோகரன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியது:
நவீன கணினி ஆய்வகம் துவங்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் கல்விக் கற்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் (பொ) மணிமேகலை ஜெயபால் பேசுகையில், கல்லூரிக்கு ஒப்பந்த அடிப்படையில் 4 விரிவுரையாளர்களை நியமிக்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.1 லட்சம் வழங்கிய முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரனுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் விழாவில் 31 புதிய கணினிகள் உள்ளிட்ட ரூ.29 லட்சம் மதிப்பிலான கணினி ஆய்வத்தை கே.ஏ.,மனோகரன் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கு.ஞானசம்பந்தன் தலைமையில் உலகை உயர்த்தப் போவது கணினியா, கலப்பையா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் உலகை உயர்த்தப்போவது கலப்பையே என்ற தீர்ப்பு அளித்தார். கல்லூரி புதிய முதல்வராக பொறுப்பேற்ற கீதா வரவேற்றார். விழாவில் ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் முனிராஜ், பிஎம்சி கல்லூரித் தாளாளர் பொறியாளர் பி.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.