கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு அமைக்கும் பணி நடைபெறுவதால் தண்ணீர் சேமிக்க இயலாத நிலை உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகளில் 1-ஆம் எண் கொண்ட மதகு கடந்த மாதம் 29-ஆம் தேதி பழுதடைந்தது. அந்த மதகு அப்புறப்படுத்தப்பட்டு புதிய மதகு அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 51 அடி தண்ணீர் 31 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், அணைக்கு வரும் நீர், பாசனக் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன. வழக்கமாக டிசம்பரில் இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், இரண்டாம் போக பாசனத்துக்குத்தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்தெரிவித்தது:
கிருஷ்ணகிரி அணையில் சேதம் அடைந்த மதகுக்கு பதிலாக புதிய மதகு அமைக்கும் பணி தொடங்கி உள்ள நிலையில், அணையில் தண்ணீர் சேமிக்க இயலாது. இதனால், ஆற்றில் வெளியேற்றப்படும் நீர் வலது, இடது கால்வாய்கள் மூலம் பாசனத்துக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.