ஒசூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் பீரேஷ் (22). இவர் ஒசூர் சிப்காட் சூசூவாடி பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் திங்கள்கிழமை சிமெண்ட் கலவை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஒசூர் சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் முதியவர் சாவு
ஒசூர், ஜூன் 20: ஒசூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
ஒசூரில் கிருஷ்ணகிரி சாலையில் வருமான வரித்துறை அலுவலகம் பின்புறம் உள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் நரசிம்மன் முனுசாமி (75). இவர் திங்கள்கிழமை ஒசூர் -கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த நரசிம்மன் முனுசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஒசூர் அட்கோ காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.