குடிநீர்த் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அறிவுறுத்தியுள்ளார்.
கடும் வறட்சியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
அதன்படி, பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், பாலிநாயனப்பள்ளி, ஆஞ்சூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள், அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்ட உதவி செயற்பொறியாளர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் சேகர், சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.