கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் வீணாகச் செல்லும் நீரை சேமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள லாரி உரிமையாளர்களை அழைத்து அரசு பேச வேண்டும். லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்.
கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்தை தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூரில் விமானச் சேவையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீரை சேமிக்க கால்வாய் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.