ஒசூர் நகராட்சியை தரம் உயர்த்தும் தமிழக அரசின் முடிவை ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வி.ஞானசேகரன் வரவேற்றுள்ளார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், ஒசூருக்கு பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஒசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சூளகிரியில் வர்த்தக ஊக்குவிப்பு மையம் தொடங்கப்படும். ஒசூரில் விமான சேவை விரைவில் தொடங்கப்படும்.
ஒசூரில் வெளிவட்டச் சாலை, தளி சாலையில் ரயில்வே மேம்பாலம், தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளை ஒசூர் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (ஹோஸ்டியா) வரவேற்றுள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் வி.ஞானசேகரன் கூறியது:
ஒசூரில் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழில்சாலைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்சாலைகளும் இயங்கி வருகின்றன. எனவே, இங்கு உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களை விற்பனை செய்ய வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம்.
தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும், ஒசூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதை ஹோஸ்டியா சங்கம் வரவேற்றுள்ளது என்றார்.