சந்தூரை அடுத்த வேடர் தட்டக்கல்லில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேடர் தட்டக்கல் கிராமத்தில் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீருக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறு உள்ளது. ஆனாலும், இதில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் நிரப்பப்படாமலும், குடிநீர் விநியோகத்துக்கு மாற்று நடவடிக்கை எடுக்காமலும் பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தனமாக உள்ளதாகக் கூறி, 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், காவேரிப்பட்டணம்- கண்ணன்டஹள்ளி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் பண்டரிநாதன், போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் ராகேஷ்சர்மா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.