பெங்களூரிலிருந்து தருமபுரிக்கு கடத்திச் சென்ற 672 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த ஒசூர் போலீஸார், 3 பேரைக் கைது செய்தனர்.
ஒசூர் கலால் பிரிவு ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது, 672 மதுப் புட்டிகள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, காரிலிருந்த 2 பேர் தப்பினர்.
மேலும் காரிலிருந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த கும்மனூர் சூடனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (30), கர்நாடக மாநிலம், ஆனேக்கல்லை அடுத்த பித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த தப்ரேஷ்கான்(35), அதே பகுதியைச் சேர்ந்த அப்ரித்கான்(20) என்பது தெரிய வந்தது. தலைமறைவான பெங்களூரைச் சேர்ந்த குமார் என்கிற சிவக்குமார், அல்தாப் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.