கார்த்திகை மாத முதல் நாளான சனிக்கிழமை கிருஷ்ணகிரியில் ஐயப்ப பக்தர்கள் புனித மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலையில் ஐயப்பன் கோயிலின் நடை, வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு கேரள மாநில பக்தர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் இந்தியா மட்டுமல்லாமல் அயல் நாட்டினரும் அனைத்து மதத்தினரும் வருகை தந்து சுவாமியை வணக்குவது வழக்கம்.
ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், இதற்கு பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு கருதி, சபரி மலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், சபரி மலைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது.
இதனிடையே கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி நகரில் சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், குருசாமியின் தலைமையில் புனித மாலையை அணிந்து, தங்களது விரதத்தைத் தொடங்கினர். 41 நாள்கள் மண்டல விழாவையடுத்து சபரி மலை ஐயப்பன் கோயில் டிசம்பர் 27-ஆம் தேதி நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் புனித மாலையை அணிந்து, தங்களது விரதத்தை பக்தியுடன் தொடங்கினர்.