மொகரத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தில் முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே கூர்மையான கத்திகளால் தாக்கிக் கொள்ளும் வழிபாட்டு முறை புதன்கிழமை நடைபெற்றது.
முகமது நபியின் பேரன், இமாம் உசேன் மற்றும் அவருடன் இருந்தவர்களை எஷீர் என்பவர் கொடுமைப்படுத்திக் கொன்ற நாளை ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.
நிகழாண்டு மொகரம் நாளையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்துள்ள ஜெகதேவி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஷியா பிரிவு முஸ்லிம்கள், கூர்மையான சிறு ஆயுதங்களால் தங்களைத் தாங்களே தாக்கி வருத்திக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற சிலர் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தனர்.