ஒசூரில், விநாயகர் சிலையைக் கரைக்க சென்ற இளைஞர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாலை குள்ளனம்பட்டியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (20). இவர் ஒசூர் பேடரப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் தங்கியிருந்து, தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை பேடரப்பள்ளி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலையைக் கரைக்க, சாந்தபுரம் ஏரிக்கு நந்தகுமார் சென்றார்.
ஏரியில் இறங்கி விநாயகர் சிலையைக் கரைத்து விட்டு வெளியே வரும் போது, ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கிய நந்தகுமார், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவரது உடல் மீட்கப்பட்டு, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஒசூர் சிப்காட் காவல் உதவி ஆய்வாளர் பாரதிராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.