ஒசூரில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு
ஒசூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் எஸ். ஜோதி வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அவர் ஒசூர் நகராட்சியில் அந்திவாடி, ராம் நகர், கர்னூர், டி.வி.எஸ்.நகர், ராமர் கோயில், முனீஸ்வர் நகர், கொத்தூர், மத்தம் அக்கரஹாரம், அரசென்ட்டி, லால், மூக்கண்டப்பள்ளி, பூங்கா நகர், சூவாடி, பேடரப்பள்ளி, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது அவர் பேசியது: அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக ஆட்சித் தொடர வேண்டுமெனில் ஒசூரில் அதிமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். அவருடன் முன்னாள் கவுன்சிலர் சரஸ்வதி நடராஜன், அசோகாரெட்டி, ஸ்ரீதர், மணிகண்டன், பாபு, முரளி, உள்ளிட்ட பலர் வாக்குகளை சேகரித்தனர்.
திமுக வேட்பாளர்
ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா ஒசூர் நகரில் புதன்கிழமை பிரசாரம் செய்தார்.
காந்தி சிலை, வட்டாட்சியர் அலுவலக சாலை, காலேகுண்டா, பார்வதி நகர், கசவுகட்டா, சானசந்திரம், செனனத்தூர், தேர்பேட்டை, காமராஜ் காலனி, சூடசந்திரம், உமாசங்கர் நகர், சீத்தாராம் நகர், நெசவாளர் காலனி, ஜாப்பர் தெரு, கீழ்கொல்லர் வீதி, ஜனபர் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 8 ஆண்டுகளாக ஒசூர் எம்எல்ஏ அலுவலகம் மூடியே உள்ளது. மேலும் ஒசூர் நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெற்றுவிடும் எனக் கருதி அதிமுக அரசு கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலே உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றபோது இலவச பட்டா வழங்கப்பட்டது. உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது. ஒசூரில் முதல் மற்றும் இரண்டாவது சிப்காட் கொண்டு வந்தது. எனவே நடைபெறவுள்ள சட்டப் பேரவை இடைத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒசூரில் திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்றார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், அவைத் தலைவர் யுவராஜ், நகர பொருலாளர் சென்னீரப்பா, தொண்டரணி அமைப்பாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.