கிருஷ்ணகிரியில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ததாக கல்வி அலுவலர், அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், கெலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் நாகராஜ், நெடுங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மருத்துவ விடுப்பில் சென்று, ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் சென்றது.
இந்தப் புகார் மீது விசாரணை நடத்த, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணையில் வட்டாரக் கல்வி அலுவலர் நாகராஜ், ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும், ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
மேலும், இவர்கள் இருவரும் அக் கட்சியின் தொப்பி அணிந்திருந்த புகைப்படம், சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் நாகராஜ், ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் இருவர், அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக எழுந்த குற்றச் சாட்டின்பேரில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கல்வித் துறையைச் சேர்ந்த இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.