வேப்பனஅள்ளியில் தனியார் நகைக் கடையில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்குக்குப் பணம் அளித்தால், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சு.பிரபாகர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர், வேப்பனஅள்ளி அருகே பூதிமூட்லு கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பணம், ஆவணங்கள் ஏதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து ராஜேந்திரனின் உறவினருக்குச் சொந்தமான வேப்பனஅள்ளியில் உள்ள நகைக் கடையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் உதவி அலுவலர் குணசேகரிடம் ஒப்படைத்தனர்.