அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பர்கூரை அடுத்த சிந்தகம்பள்ளி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் அன்பு (52). இவர் கிருஷ்ணகிரியை அடுத்த சாமந்தமலை குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாரிடம் (32) அரசு வேலை வாங்கித் தருவாதக் கூறி ரூ.4.50 லட்சம் வாங்கினாராம். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. இதனால், பணத்தை திருப்பித் தரக் கோரி, விஜயகுமார் அன்புவை வலியுறுத்தினார். ஆனாலும், அவர் பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து அன்புவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.93.85 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.