குள்ளனூர் மாரியம்மன் கோயில் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை 2 -ஆம் நாள் காலை விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாரியம்மன் சுவாமி மயிலாட்டம், மாடு ஆட்டம், கரகாட்டம், மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மழை பெய்து, ஊர் செழிப்படைய பெண்கள் சுவாமியின் பாதங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றி மஞ்சள், குங்குமமிட்டு பூ வைத்து கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர். இதையடுத்து பெண்கள் மா விளக்கு எடுத்து ஊர்வலமாகச் சென்று கோயிலையடைந்தனர் பின்னர், பொங்கல் வைத்து அம்மனை வேண்டி பட்டுப்புடவை, வெள்ளி கண் அடக்கம், பணம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, ஆடுகளை பலியிட்டு அனைவருக்கு கறி விருந்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை குள்ளனூர் ஊர் மக்கள் செய்திருந்தனர்.