சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலையைப் பார்ப்பதற்காக லாரி ஓட்டுநர் வேகத்தை திடீரென குறைத்ததால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த முனிரத்ன கவுண்டர் மகன் சரவணன் (43), அவரது நண்பர்களான வேலு (39), இளையராஜா (38) மற்றும் ஓட்டுநர் சரவணபாபு (36) ஆகியோருடன் சபரிமலையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்றனர். சூளகிரி சாமல்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற லாரி ஓட்டுநர் அப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலையைப் பார்ப்பதற்காக லாரியின் வேகத்தை குறைத்தார். அதே போல சரவணனின் கார் ஓட்டுநரும் வேகத்தை குறைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கார் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் காரில் இருந்த சரவணன் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் சரவணன், வேலு ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். ஓட்டுநர் சரவணபாபு மற்றும் இளையராஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.