எவ்வித முன்னறிவிப்பு, முறையான விசாரணை இல்லாமல் தகுதி வாய்ந்த பயனாளிகள் பெற்று வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு முதியோர் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
அரசு குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்றும் ஒருசிலர் செய்த தவறுகளுக்காக எவ்வித விசாரணையும் இல்லாமல் திடீரென முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து நாள்தோறும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஏராளமான மனுக்கள் அனுப்பப்படுகின்றன.
ஆனாலும், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததில்லை என பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், நிறுத்தப்பட்ட பயனாளிகள் தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டால், உதவித்தொகையை மீண்டும் மூப்பு வரிசை அடிப்படையில்தான் வழங்குவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஊனமுற்றோர், ஆதரவற்றோர் என அடித்தட்டு மக்கள் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பதில் பெற முடியாமல் முயற்சி மேற்கொள்வதில்லை. பலர் உயிரிழந்துவிடுகின்றனர். பதிவுமூப்பு வரிசை என்பது வெளிப்படைத்தன்மை இல்லாமல், பரிந்துரை அடிப்படையில் ரகசியமாக உதவித்தொகை ஆணை
அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சாந்தகுமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி உண்மையை அறிந்து உண்மையான ஏழை முதியோர்களுக்கு மாத மாதம் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை வழங்க வேண்டும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் தரும் அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனாலும், நிறுத்தப்பட்ட உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும்.
இதுகுறித்து போச்சம்பள்ளி தனி வட்டாட்சியர் மோகனசுந்தரம் கூறியது:
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் அரசு விதிகளின்படி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஊனமுற்றோர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைகளின்படி 40 சதவீதம் இருந்தால் மட்டுமே போதுமானதாகவும், மேலும் முதியோர்களுக்கு அரசு விதிகளின்படி இருக்கும் முதியோர்களுக்கு ஆன்லைன் வரிசைபடி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றார்.