சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம், குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி சுப்பிரமணி தலைமையில், மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனுவின் விவரம்: குருபரப்பள்ளியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக கடந்த 150 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள நிலங்களைச் சமன்படுத்தி ராகி, நெல், அவரை, துவரை போன்ற பயிர்களையும், மா, தென்னை, தேக்கு போன்ற மரங்களையும் வளர்த்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலங்களைத் தவிர வேறு வருவாய்
கிடையாது.
தற்போது, அரசானது, இந்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். அவ்வாறு, விளைநிலங்களை கையகப்படுத்தினால், பல குடும்பங்கள் ஆதரவின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டி இருக்கும். எனவே, எங்களுக்கு மாற்று இடமோ அல்லது இழப்பீடோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.