கிருஷ்ணகிரியில் தலைகவசம் அவசியம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி, புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் செயல்படும் கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில், நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், கொடியசைத்து தொடக்கி வைத்தார். கல்வி குழுமத்தின் நிறுவனர் சி. பெருமாள், கல்லூரி முதல்வர் ஆறுமுகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காவல் ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி, பெங்களூரு சாலை, காந்தி சிலை வழியாகச் சென்று பழையபேட்டை மீன் சந்தை அருகே நிறைவு பெற்றது.
விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைகவசம் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணியை நிர்வாக அலுவலர் சுரேஷ் ஒருங்கிணைத்தார்.