ஊதிய உயர்வு, பணியிடக் கலந்தாய்வு கோரி, தருமபுரியில் அரசு மருத்துவர்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் புறக்கணித்தனர்.
அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், மருத்துவர்கள் பணியிடத்தைக் குறைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிகிச்சை மருத்துவப் பிரிவில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். காலம் சார்ந்த ஊதிய உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு வட்டார தலைமை மருத்துவமனைகள், பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மருத்துவர்கள், காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணிவரை புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியைப் புறக்கணித்தனர். இதில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். எனினும், அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்புப் பயிலும் மருத்துவர்கள் மூலம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, அரசு மருத்துவர்களின் புறக்கணிப்பால் புற நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை 2 மணி நேரம் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் தலைமை வகித்தார். பல்வேறு மருத்துவ அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சதீஷ், கோபி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தினசரி சுமார் 1,200 முதல் 1,500 பேர் வரை புற நோயாளிகளாக வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். மேலும், சுமார் 70-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினசரி சுமார் 10-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்களின் 2 மணிநேர போராட்டத்தால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
மருத்துவர்கள் இல்லாததால் ஏழை எளிய நோயாளிகள் மிகவும் சிரமத்துடன் தனியார் மருத்துவமனைகளை நாடி சென்றனர்.