வேப்பனஅள்ளி தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து அந்த மனுவில் தெரிவித்துள்ளது: வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் பல கி.மீ. தூரம் பயணிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, கெலவரப்பள்ளி அணையிலிருந்து, துரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், தென்பெண்ணை ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் தொட்டிநாயக்கனஅள்ளி ஏரிக்கு தண்ணீர் நிரப்ப மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என அதில் கோரியுள்ளனர்.