கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தீத் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இந்த விழிப்புணர்வு முகாமை நடத்தினர். நிகழ்வுக்கு நலப் பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பரமசிவம், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, கிருஷ்ணகிரி நிலைய அலுவலர் ஆனந்தன், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆபத்து காலங்களில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாடி கட்டட விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
சாலையில் சரிந்த மரங்களை அப்புறப்படுத்துவது, இரும்புகளை துண்டாக்குவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.