பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குட்பட்ட மடம் காட்டு கொட்டாய் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொது மக்கள் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட மடம் காட்டு கொட்டாய் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்த்துளை கிணறுடன் கூடிய சிறிய நீர்த்தேக்க தொட்டிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது நிலத்தடி நீர்மட்டமானது குறைந்து காணப்படுவதால் நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் இல்லை.
மேலும் மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகிப்பதாகவும், அதுவும் முறையாகக் கிடப்பதில்லை எனவும், இப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை பென்னாகரத்திலிருந்து-ஏரியூர் செல்லும் சாலையில் கூத்தாப்பாடி பிரிவு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பென்னாகரம் வட்டாட்சியர் சதாசிவம் மற்றும் பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி உள்ளிட்டோர் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.