மத்தூர் அருகே அரசு பேருந்து நடத்துநரின் மனைவியிடம் 5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் கீழ்வீதியில் வசித்துவருபவர் செல்வநாயகம் (47). இவர் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஞானசௌந்தரி. இவர் போச்சம்பள்ளி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குத் தேவையான மளிகை பொருள்களை வாங்குவதற்காக போச்சம்பள்ளி வாரச் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மணிபர்ஸில் ரூ.5, 500 ரொக்கம், 5 பவுன் தங்க தாலி சங்கிலியை வைத்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர் பொருள்கள் வாங்கி விட்டு மத்தூர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது ஞானசௌந்தரி தனது பர்ஸை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த பணம், நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் மத்தூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.