பென்னாகரம் அருகே பெரும்பாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலை பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் மூன்று ஊராட்சிகளும், பத்துக்கும் மேற்பட்ட குக் கிராமங்களும் உள்ளன. இப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என வெளியூர்களுக்கு செல்ல நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இப் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பேருந்து நிலையம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தருமபுரி மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2017 - 2018 -ஆம் நிதியாண்டில் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அப்போதைய தருமபுரி மக்களவைத்தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பெரும்பாலை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதனால் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பேருந்துக்காக சாலை ஓரத்தில் நிற்கும் அவல நிலை உள்ளதாகவும், முதியவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது வெயில் தாக்கத்தினால் மயங்கி விழும் நிலை உள்ளதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே இப் பகுதி மக்கள் நலனை கருதி, இந்த பேருந்து நிலையத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.