கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது குறித்து, விவசாயிகள், தனியார் தொழில்சாலை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாருவது குறித்து ஆய்வு செய்து, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி , ஏரிகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்துவது மற்றும் மழை நீரை வீணாக்காமல் சேமிப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, வன அலுவலர் தீபக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.