சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் பிரேமா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களைக் கொண்டு, சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், முன்னாள் ராணுவத்தினர் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) 53 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 48 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வயது மற்றும் கல்வித் தகுதியுடைய, விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நிறைவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04343-236134 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.