கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பத்தில் ஏரி நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்த சகாயநாதன் மகன் ஸ்டீபன்(11). இவர், ஒரப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். சகாயநாதனின் தம்பி ஜெயப்பிரகாஷின் மகன்கள் சாரோன் ராஜ் (11), கிறிஸ்தோன்ராஜ் (6) ஆகிய இருவரும், பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், சிறுவர்கள் மூவரும், கந்திகுப்பம் - எலத்தகிரி சாலையில் உள்ள ஏரிக்கு செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றனர். ஏரியில் குட்டைபோல நீர் தேங்கியிருக்கும் பகுதியில் இறங்கி விளையாடியுள்ளனர். அப்போது ஆழமான பகுதியில் இறங்கிய ஸ்டீபன், கிறிஸ்தோன்ராஜ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதைக் கண்ட சிறுவன் சாரோன்ராஜ் அதிர்ச்சியால் அலறினார். இந்த அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய சிறுவர்களை உயிருடன் மீட்க முயன்றனர். ஆனால், இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த போலீஸார், சிறுவர்களின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் குறித்து, கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.