பர்கூர் அருகே பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர் அருகே உள்ள மல்லபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி, கஸ்தூரி(24). இவர், கடந்த மாதம் 26-ஆம் தேதி, தனது வீட்டை பூட்டிவிட்டு பர்கூரில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், ரூ.1 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றார்.
அதேபோல பர்கூர் அருகே உள்ள ஜி.நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சென்ன கிருஷ்ணன்(44), கடந்த 3-ஆம் தேதி, தனது வீட்டி பூட்டி விட்டு, சொந்த கிராமமான தருமபுரி மாவட்டம், மொரப்பூருக்கு சென்றார். இந்த நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், வீட்டினுள் புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றார்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து, தனித் தனியே வழக்குப் பதிந்த பர்கூர் போலீஸார், விசாரணை செய்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி, புதிய அரசு குடுயிருப்பைச் சேர்ந்த இளைஞர் வி.ராஜேஷ்(27), இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.