கிருஷ்ணகிரி அருகே பணியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர் ராஜாவை கொலை செய்த கொள்ளையர்கள் ரூ.2 லட்சத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் குறித்து, துப்புக் கிடைக்காத நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவுபடி, கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் குமார், காவல் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கணேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குருபரப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் சிலரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கொலை சம்பவத்தன்று, கடை அருகே பயன்படுத்தப்பட்ட செல்லிடப்பேசி எண்களை சேகரித்துள்ள போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.