கிருஷ்ணகிரியில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. தொடர்மழையால், நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்புகளின் அருகே உள்ள காலி இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி உள்ளதால் கட்டடங்கள் பாதிக்கப்படுதாகவும், வீடுகளுக்குள் பாம்பு, பூச்சிகள் படையெடுத்துவருவதாகவும் குடியிருப்போர் புகார் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, மழை நீர் தேங்கினால், கட்டடங்கள் இடிந்து விழும் நிலை இருப்பதால், குடியிருப்புகளின் அருகே தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி, கழிவு நீர்க் கால்வாயை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.