சிராவண மாத கடைசி சனிக்கிழமையொட்டி, ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிராவண மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆண்டுதோறும் சிராவண மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தெலுங்கு, கன்னட மொழிப் பேசும் மக்கள் விரதம் இருந்து, பெருமாள் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வழிபடுவதும் வழக்கம்.
ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒசூர் அருகே கோபசந்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேச் பெருமாள் சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி மூலவர் வெங்கடேசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒசூர், சூளகிரி, காமன்தொட்டி, பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல் ஒசூர் வெங்கடேஷ் நகர் மலைக்கோயிலில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. சூளகிரி வரதராஜபெருமாள் கோயில், பாகலூர் அருகே குடிசெட்லுவில் உள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேத திம்மராய சுவாமி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.