ஊத்தங்கரை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஊத்தங்கரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில், மூத்த வழக்குரைஞர் எஸ்.ரங்கநாதன், ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் மனு அளித்தார். சங்கச் செயலாளர் ஜி.வஜிரவேல், பொருளாளர் மாதேஸ்வரன், வழக்குரைஞர்கள் மூர்த்தி, பெருமாள், பிரபாவதி உள்பட 39 பேர் கலந்து கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர். அதில் நாட்டில் உள்ள அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கும் தனி கட்டடம், வழக்குரைஞர்களுக்கு தனி அறை ஏற்படுத்தித் தர வேண்டும். இருக்கை வசதி, நூலகம், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வழக்குரைஞர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் காப்பீட்டு வசதி, இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித் தொகை, விபத்து, நோயினால் உரிரிழக்கும் வழக்குரைஞர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதி திட்டம் வகுத்து ரூ.5 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிட வேண்டும். வழக்குரைஞர்கள் குடியிருப்புத் திட்டத்துக்காக நிலம் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.